22/03/2016

நினைவஞ்சலி.

அன்பு நண்பர்களே,                                                           இன்று (22/3/16) காலை 7.28 மணிக்கு எமது அன்பிற்கும், மதிப்பிற்கும் உரிய தோழர். T.S.குமார் அவர்கள்  66வது வயதில் தனது உயிர் இயக்கத்தை நிறுத்திக்கொண்டார். கடந்த பல மாதங்களாக அவர் உடல் நலமின்றி இருந்து வந்தார். BSNL துறையில் தொழில்நுட்பனராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர்.                                                                 தோழர். குமார்  மார்க்சியத்தினை தத்துவார்த்தமாக உள்வாங்கியவர். அதனால்தான் ஊசலாட்டமின்றி அவரால் நம்பிக்கையுடன் இருக்கமுடிந்தது. எப்போது பேச வேண்டும், எப்போது பேசக்கூடாது என்பதை துல்லியமாக அறிந்தவர். அமைப்புரீதியான பிரச்சினைகள், ஏற்றத்தாழ்வுகள் அவரை என்றும் பாதித்ததில்லை விவாதங்களை எப்படி நடத்தவேண்டும், கூட்டத்தை எப்படி கட்டுப்பாடுடன் வ்ழிநடத்தவேண்டும் என்பதை நடைமுறையில் போதித்தவர். எவரையும், எப்போதும் அவர்  கண்ணியக்குறைவாக நடத்தியதுமில்லை, பேசியதுமில்லை.                                            கம்பீரத்தின் பெயர் தோழர். குமார். கம்பீரம் என்றால் அவரது நடை, பேச்சு, அவரது உருவம், குரல், மீசை என அனைத்துமே கம்பீரம்தான்.  ஊர்வலங்களில்  தனது பேராண்மைமிக்க குரலொலியில் அவர் கம்பீரமாக எழுப்பும் முழக்கங்கள் வர்க்க உணர்வு, ஜனநாயக உணர்வு உள்ள எந்த ஒரு நெஞ்சத்தையும் தம் வசமாக்கிக்கொள்ளும். சொல்லும் செயலும் ஒன்றாக இருக்கவேண்டும் என்பதில் கவனமாக இருப்பவர் தோழர். குமார். தனது மகனின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டியதுடன் சிறப்பாக திருமணமும் செய்து வைத்தார்.                                                                                 மாற்றுமருத்துவத்தின் மீது அளப்பரிய நம்பிக்கை கொண்டிருந்தார். சித்தா,ஹோமியோபதி, அக்குபிரஷர் என அவரது ஆர்வம் பரந்த அளவில் இருந்தது.  பொதுவாக அன்றைய காலகட்ட மார்க்சியர்களில் அனேகர் புகைக்கும் பழக்கம் உள்ளவர்கள். தோழர். குமாரும் அதற்கு விதிவிலக்கல்ல.  தொடர்ச்சியாக  சிகரெட்டை புகைத்து வந்ததால், அதுவே அவர் நோய்வாய்ப்படவும் காரணமாயிற்று. ஆனால் அவர் தனது உடல் வலியை, மன உளைச்சலை, என்றுமே வெளியிட்டதில்லை. மெளனமாகவே தனக்குள் அடக்கிக்கொண்டவர். சிறப்பு கவனத்தை அவர் என்றுமே கோரியதில்லை. அவர் நோய்வாய்பட்ட நாள் முதல் மரணித்த இந்த நாள்வரையில் அவரது மகன் திரு. விஜய், மற்றும் அவரது துணைவியார். திருமதி. விஜயலட்சுமி இருவரும் அவரை கவனித்துக்கொண்டவிதம் எல்லோரையும் பிரம்மிக்கவைத்தது. தோழர்.குமார் கொடுத்துவைத்தவர் என ஊரார் பேசிக்கொள்ளும் அளவுக்கு அவர்களது பராமரிப்பு இருந்தது.                                                           தோழர். குமார் தனது BSNL துறைரீதியான தொழிற்சங்க நடவடிக்கைகளில் தீவிரமாக பங்கேற்றவர். மார்க்சியத் தத்துவத்தின் மீது மலையளவு நம்பிக்கையுள்ளவர். தான் சார்ந்திருந்த மக்கள் ஜனநாயக இளைஞர் கழகத்திற்கு தனது உறுதியான ஆதரவை வாழ்நாள் முழுவதும் தொடர்ச்சியாக வழங்கியவர். நம்பிக்கை, அமைதி, உறுதி இந்த வார்த்தைகளுக்கு உயிர்கொடுத்தவர், அதுவாகவே வாழ்ந்தவர். தோழரே என்ற விளிப்பை செவிமடுத்துக்கொண்டே மரணித்தவர்.                                                                                            தோழர். குமார் நீங்கள் மரணித்தது  உடல் அளவில்தான். மார்க்சியம் பற்றிய பேச்சு எங்கு ஒலித்தாலும் அங்கு உங்களது நினைவு படர்ந்திருக்கும். எங்கு இன்குலாப் முழக்கம் கேட்டாலும் உங்களது உருவம் மனக்கண்களில் நிழலாடுவதை தடுக்கமுடியாது.  உங்களது நினைவு நீடூழி வாழ்க.                                                                                                                     

No comments:

Post a Comment